நடுவீரப்பட்டு அருகே டிராக்டர் மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி


நடுவீரப்பட்டு அருகே டிராக்டர் மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 4 May 2020 9:41 PM GMT (Updated: 4 May 2020 9:41 PM GMT)

நடுவீரப்பட்டு அருகே டிராக்டர் மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.

நெல்லிக்குப்பம்,

கடலூர் திருப்பாதிரிப்பலியூர் போடிச்செட்டி தெருவை சேர்ந்தவர் ஞானசேகர்(56). இவர் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு, நேற்று காலை தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். நடுவீரப்பட்டு அடுத்த சிலம்பிநாதன்பேட்டை குறுக்கு சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஞானசேகரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாவு

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஞானசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞான சேகருக்கு கவுரி(48) என்கிற மனைவியும் வெங்கடகிருஷ்ணன் (27), கோபாலகிருஷ்ணன்(25) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

Next Story