தூத்துக்குடியில் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது - காற்றில் பறந்த சமூகஇடைவெளி


தூத்துக்குடியில் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது - காற்றில் பறந்த சமூகஇடைவெளி
x
தினத்தந்தி 5 May 2020 10:30 PM GMT (Updated: 5 May 2020 6:54 PM GMT)

தூத்துக்குடியில் நேற்று கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அவர்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் கொரோனா இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறி உள்ளது. இதனை தக்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை கண்காணித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருப்பதால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடியில் பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டு இருந்தன. மக்கள் அதிக அளவில் வாகனங்களில் சென்றனர்.

மக்கள் கூட்டம்

பெரும்பாலான சாலைகளில் வாகன ஓட்டிகள் அணிவகுத்து சென்றனர். அதே போன்று கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைகளுக்கு வந்த பொதுமக்கள் முறையாக சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. பலர் முக கவசமும் அணியவில்லை. கடைகளின் முன்பு கட்டங்கள் வரையப்பட்டு இருந்தாலும், அந்த கட்டங்களை மக்கள் மதிக்கவில்லை. அதில் நிற்குமாறு கடைக்காரரும் அறிவுறுத்தியதாக தெரியவில்லை.

அதே நேரத்தில் சிலர் முக கவசம் அணிந்து கொண்டு, சமூகஇடைவெளி விட்டு நின்றாலும், கடைகளில் நீண்ட நேரம் காத்து நிற்க வைத்து விடுகிறார்கள். இதனால் மக்கள் இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு வருகின்றனர். இதனால் அரசு உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Next Story