திருவாரூரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு ‘சீல்’


திருவாரூரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 5 May 2020 11:00 PM GMT (Updated: 5 May 2020 11:00 PM GMT)

திருவாரூரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 3 கடைகளுக்கு தாசில்தார் நக்கீரன் ‘சீல்’ வைத்தார்.

திருவாரூர், 

திருவாரூரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 3 கடைகளுக்கு தாசில்தார் நக்கீரன் ‘சீல்’ வைத்தார்.

கிருமி நாசினி

ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களின் நலன் கருதி ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கடையின் முன் பகுதியின் மேஜைகளை தொடாமல் இருக்கும் வகையில் 1 மீட்டர் இடைவெளியில் கயிறு கட்டி வைக்க வேண்டும். பொதுமக்கள் கைகழுவுவதற்கு கடை முன்பு கட்டாயம் கிருமி நாசினி திரவம் வைக்க வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்க வருபவர்களின் பெயர், செல்போன் எண் ஆகியவற்றை தனி பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கடைகளுக்கு ‘சீல்’

அரசு அறிவித்துள்ள கால நேரத்தை கடைபிடிக்க வேண்டும். இதனை மீறி செயல்படும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து நேற்று திருவாரூர் பகுதியில் தாசில்தார் நக்கீரன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி குறித்த நேரத்துக்கு பிறகும் கடைகளை திறந்து வைத்ததாக பனகல் சாலையில் உள்ள ஒரு ஹார்டுவேர் கடை, திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு மளிகை கடை மற்றும் அனுமதியின்றி திறக்கப்பட்ட சலூன் கடை ஆகிய 3 கடைகளுக்கு தாசில்தார் ‘சீல்’ வைத்தார்.

Next Story