ஊரடங்கு உத்தரவால் வாரணாசியில் தவித்த 22 பேர் புதுவை வந்தனர்


ஊரடங்கு உத்தரவால் வாரணாசியில் தவித்த 22 பேர் புதுவை வந்தனர்
x
தினத்தந்தி 6 May 2020 1:23 AM GMT (Updated: 6 May 2020 1:23 AM GMT)

ஊரடங்கு உத்தரவால் வாரணாசியில் சிக்கித்தவித்த 22 பேர் நேற்று புதுவை திரும்பினர்.

புதுச்சேரி,

புதுச்சேரி சக்தி நகரை சேர்ந்த 22 பேர் ஆன்மிக பயணமாக கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வாரணாசிக்கு சென்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் புதுவை வர முடியாமல் வாரணாசியில் சுமார் 45 நாட்கள் சிக்கி தவித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று புதுச்சேரி மாவட்ட கலெக்டர் மூலம் அங்கு உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி போன்ற வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன.

புதுவை வந்தனர்

இந்த நிலையில் புதுவை அரசின் நடவடிக்கையின்படி 22 பேரும் சிறப்பு அனுமதி பெற்று வாரணாசியில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்சில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டனர். அவர்கள் நேற்று மாலை 4 மணியளவில் புதுவை எல்லையான கோரிமேடுக்கு வந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் அனைவரும் தாங்களாகவே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும், வருவாய் துறையினர் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என ஸ்டிக்கர் ஒட்டி உள்ளனர்.

Next Story