நெல்லை, தென்காசியில் கர்ப்பிணி உள்பட 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று


நெல்லை, தென்காசியில் கர்ப்பிணி உள்பட 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
x
தினத்தந்தி 6 May 2020 1:31 AM GMT (Updated: 6 May 2020 1:31 AM GMT)

நெல்லை, தென்காசியில் கர்ப்பிணி உள்பட மேலும் 2 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது.

நெல்லை, 

நெல்லை, தென்காசியில் கர்ப்பிணி உள்பட மேலும் 2 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கொரோனா

நெல்லை மாவட்டத்தில் 63 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 5 பேர் தவிர மற்றவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

அதே நேரத்தில், நெல்லை மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதிக்கு பிறகு யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இதனால் கொரோனா பாதிப்பில் சிவப்பு மண்டலத்தில் இருந்த நெல்லை மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது. ஓரிரு நாட்களில் பச்சை நிறமாக மாறும் சூழ்நிலையில் இருந்தது.

கர்ப்பிணி

இந்த நிலையில் மேலப்பாளையத்தை சேர்ந்த 24 வயது நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவத்துக்குரிய பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது கொரோனா பரிசோதனையும் அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தனது குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டவர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த கர்ப்பிணியின் கணவர், குழந்தைகள், உறவினர்கள் என மொத்தம் 17 பேரிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களின் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது.

சென்னையில் இருந்து வந்தவர்

இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து நெல்லைக்கு திரும்பி வருவோரையும் சுகாதார குழுவினர் பிடித்து தனிமைப்படுத்தி வருகின்றனர். இதில் சளி, காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் சென்னையில் இருந்து வந்த ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நேற்று முன்தினம் வரை 46 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் நெல்லை, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் புளியங்குடியில் நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட பரிசோதனையில், ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் புளியங்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களையும் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 50 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஏற்கனவே 12 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story