சமூக இடைவெளியை கடைபிடிக்க ரேஷன் கடைக்கு குடையுடன் வந்த பெண்களை பாராட்டிய கலெக்டர்


சமூக இடைவெளியை கடைபிடிக்க ரேஷன் கடைக்கு குடையுடன் வந்த பெண்களை பாராட்டிய கலெக்டர்
x
தினத்தந்தி 6 May 2020 11:00 PM GMT (Updated: 6 May 2020 8:01 PM GMT)

சமூக இடைவெளியை கடைபிடிக்க ரேஷன் கடைக்கு குடையுடன் பொருட்கள் வாங்க வந்த பெண்களை கலெக்டர் பாராட்டினார்.

திருப்பூர், 

திருப்பூர் மாநகரில் உள்ள ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து மக்கள் பொருட்களை வாங்குகிறார்களா? என்பதை அறிய கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று காலை ரேஷன் கடைகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சங்கத்தின் கீழ் செயல்படும் எஸ்.வி.காலனி, வெங்கடேஷ் புரம், கருவம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார்.

அப்போது ரேஷன் கடைகளுக்கு வந்த பொதுமக்கள் குடை பிடித்து வரிசையில் நின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும்போது கொரோனாவை விரட்ட சமூக இடைவெளி அவசியம் என்பதால் பொதுமக்கள் குடையுடன் சென்று வாங்க வேண்டும் என்று கலெக்டர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அவருடைய அறிவிப்பை பின்பற்றி பொதுமக்கள் குடையை பிடித்தபடி நின்றிருந் ததை பார்த்து கலெக்டர் அவர்களை பாராட்டினார்.

இது குறித்து கலெக்டர் கூறியதாவது-

ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் அனைத்துதுறை அதிகாரி களும் ஒருங்கிணைந்து செயல் பட்டு வருகிறார்கள். முதல்- அமைச்சரின் அறிவிப்பு படி ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர் களில் 7 லட்சத்து 12 ஆயிரத்து 194 ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரண உதவித்தொகை மற்றும் உணவுப்பொருட்கள் கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. இந்த மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் 7 லட்சத்து 57 ஆயிரத்து 206 ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த 4-ந் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகை யில் சமூக இடை வெளியை கடைபிடிக்கும் வகையில் குடையுடன் வெளியே வர வேண்டும். அனைவரும் முககவசம் அணிந்து வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அதிகாரி முருகன், திருப்பூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் கருணாகரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Next Story