செங்கல்பட்டு மாவட்டத்தில் 41 மதுக்கடைகளுக்கு அனுமதி


செங்கல்பட்டு மாவட்டத்தில் 41 மதுக்கடைகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 6 May 2020 10:45 PM GMT (Updated: 6 May 2020 10:15 PM GMT)

தமிழக அரசு உத்தரவுப்படி, டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்பட உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 41 மதுக்கடைகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு,

மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நடைமுறையில் உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டது.

இந்நிலையில் அரசு தற்போது டாஸ்மாக் மதுக்கடைகளை தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர பிற இடங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் மதுக்கடைகளைத் திறக்கலாம். மேலும் சென்னை உள்பட வெளிமாவட்டத்தினருக்கு மதுபானம் விற்பனை கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

41 கடைகள் அனுமதி

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் 86 மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள 45 கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைகளாக செங்கல்பட்டு வட்டத்தில் 10, மதுராந்தகம் வட்டத்தில் 9, திருக்கழுக்குன்றம் வட்டத்தில் 12, திருப்போரூர் வட்டத்தில் 10 கடைகள் என மொத்தம் 41 கடைகள் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மது வாங்கக்கூடியவர் கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். பொது இடத்தில் மது குடித்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story