இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி: விதிமுறைகளை பின்பற்றுவதில் சிக்கல்


இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி: விதிமுறைகளை பின்பற்றுவதில் சிக்கல்
x
தினத்தந்தி 6 May 2020 11:45 PM GMT (Updated: 7 May 2020 12:10 AM GMT)

அரசு உத்தரவுபடி விருதுநகர் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 168 டாஸ்மாக் கடைகள் செயல்பட உள்ள நிலையில் விதிமுறைகளை பின்பற்றுவதில் பிரச்சினை உள்ளதால் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதில் இருந்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட்டன. இதனால் மது பாட்டில்கள் பதுக்கலும், விதிமுறைகளை மீறி மது பாட்டில்கள் விற்பனை செய்வதும் அதிகரித்தது. இந்த நிலையில் தமிழக அரசு இன்று (வியாழக்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகளை செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. மதுக்கூடங்களுக்கு அனுமதி இல்லை. நகர்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 176 கடைகளில் 6 கடைகள் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ளதாலும், 2 கடைகள் வணிக வளாகத்தில் உள்ளதாலும் அந்த 8 கடைகளை தவிர மற்ற 168 கடைகளும் இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முககவசம் அணியாமல் வருவோருக்கு மதுபாட்டில்கள் வழங்க கூடாது என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும், கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் இன்ஸ்பெக்டர் தலைமையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 1 மணி முதல் 3 மணி வரை 40 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும் என விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பிற மாநிலங்களில் ஊரடங்குக்கு பின்னர் மதுக்கடைகள் திறக்கப்பட்டவுடன் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவானது. தமிழகத்திலும் 40 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்படுவதால் மதுக்கடைகள் முன்பு பெரும் கூட்டம் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதிலும் குறிப்பிட்ட நேரத்தில் தான் மது விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியாது. இதில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பிட்ட சில கடைகள் குடியிருப்பு பகுதிகளில் உள்ளதால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

இதுபற்றி விருதுநகர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அய்யப்பன் கூறியதாவது:-

மாவட்டம் முழுவதும் செயல்பட உள்ள 168 டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து கடைகளிலும் தேவையான அளவிற்கு மதுபாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஒரு நபருக்கு மொத்தமாக மதுபாட்டில்களை விற்பனை செய்யக்கூடாது என விற்பனையாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்ற வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறையை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டாஸ்மாக் துறையின் சார்பில் மது விற்பனைக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் டாஸ்மாக் கடைகள் முன்பு சமூக இடைவெளி கடைபிடிப்பதிலும், உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவதற்கு முன்பு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் ஆட்சேபனை தெரிவித்துள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனையின் போது பிரச்சினைகளை தவிர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Next Story