63 மதுக்கடைகள் இன்று திறப்பு கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடு


63 மதுக்கடைகள் இன்று திறப்பு கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 7 May 2020 2:42 AM GMT (Updated: 7 May 2020 2:42 AM GMT)

நீலகிரியில் 63 மதுக்கடைகள் இன்று(வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானங்களை தேடி அலைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மதுக்கடைகளில் இருந்த மதுபானங்கள் குடோனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தமிழக அரசு இன்று(வியாழக்கிழமை) மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தது.

இந்த அறிவிப்பின் படி நீலகிரி மாவட்டத்தில் இன்று 63 மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. ஒரு கடையில் 350 முதல் 400 பெட்டிகளில் மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. பல நாட்களுக்கு பின்னர் திறக்கப்படுவதால், கடைகளில் கூட்டம் அதிகரிக்கும். அதனை தொடர்ந்து குடோனுக்கு மாற்றப்பட்ட மதுபானங்கள் மீண்டும் மதுக்கடைகளுக்கு வாகனங்களில் கொண்டு வரப்படுகிறது. கூடுதல் மது வகைகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. முதல் நாளில் கூட்டம் அதிகமாக கூடும் என்பதால், போலீஸ் பாதுகாப்பு போடப் படுகிறது.

சிறப்பு ஏற்பாடு

மதுக்கடைகளில் கூட்டம் சேராமல் இருக்கவும், மதுபிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபானங்களை வாங்கி செல்லவும் கம்புகள் மூலம் தடுப்புகள் அமைத்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒருவருக்கு ஒருவர் ஆறு அடி சமூக இடைவெளியை பின்பற்ற வட்டங்கள் போடப்பட்டு இருக்கிறது. தினமும் 2 முறை கடையை சுற்றி கிருமிநாசினி தெளிக்க வேண்டும். மதுபானங்களை வாங்கி விட்டு பொது இடங்களில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

பார் செல்ல அனுமதி இல்லை. மதுக்கடைக்கு வருகிறவர்களுக்கு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள கிருமிநாசினி வழங்க வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கூட்டத்தை கட்டுப்படுத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதி இல்லை என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story