திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெரிய, சிறிய தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி


திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெரிய, சிறிய தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி
x
தினத்தந்தி 7 May 2020 2:50 AM GMT (Updated: 7 May 2020 2:50 AM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய, சிறிய தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

திண்டுக்கல்,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. எனினும், பொதுமக்களின் நலன்கருதி அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர, பிற இடங்களில் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் சிமெண்டு, இரும்பு, எலக்ட்ரிக்கல், பெயிண்ட், மரக்கடைகள், மிக்சி பழுதுநீக்கும் கடைகள், ஒர்க்‌ஷாப், ஜெராக்ஸ் கடை, எழுதுபொருட்கள் விற்பனை கடை, மோட்டார் பழுதுநீக்கும் கடைகள் திறக்கப்பட்டன. இந்த கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படுகின்றன. மேலும் பிளம்பர், தச்சர், மெக்கானிக் உள்ளிட்டோருக்கு கலெக்டர் மூலம் அனுமதி வழங்கப்பட்டது.

தொழில் நிறுவனங்கள்

இந்த நிலையில் குறைந்த பணியாளர்களை கொண்டு தனியார் நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்தவகையில் மாவட்டம் முழுவதும் 17 பெரிய தொழில் நிறுவனங்கள், 30 சிப்காட் நிறுவனங்கள், 40 சிட்கோ நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இதுதவிர கயிறு, ஆயத்த ஆடை தயாரிப்பு, ஜவுளி உற்பத்தி மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் தனித்திறனுடன் 452 தனிநபர்கள் பணியாற்றவும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. தொழில் நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்கள் வேலை செய்யலாம். முக கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்த கூடாது. பணியாளர்களை வாகனங்களில் அழைத்து வருவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். அரசு விதித்துள்ள நிபந்தனைகளை கடைபிடிக்க தவறினால், அந்த நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். 

Next Story