சாலையோரம் நின்று கொண்டிருந்த மினிவேன் மீது மற்றொரு வேன் மோதல்; டிரைவர் உள்பட 2 பேர் பலி


சாலையோரம் நின்று கொண்டிருந்த மினிவேன் மீது மற்றொரு வேன் மோதல்; டிரைவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 7 May 2020 4:17 AM GMT (Updated: 7 May 2020 4:17 AM GMT)

காவேரிப்பாகம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்த மினிவேன் மீது மோதியது. இதில், டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

பனப்பாக்கம்,

சென்னையில் இருந்து மினிவேன் ஒன்று நேற்று காலை வேலூர் நோக்கி வந்தது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த கடப்பேரி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து தாறுமாறாக சென்ற வேன் அப்பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மற்றொரு மினிவேனின் பின்பகுதியில் மோதி நின்றது. இந்த விபத்தில் வேன் டிரைவர் பார்த்திபன் (வயது 28) சம்பவ இடத்திலேயே பலியானார். வேனில் இருந்த டெக்னீசியன் மணிகண்டனுக்கு (30) பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தேசிய நெடுஞ்சாலை கொரோனா பாதுகாப்பு பணி போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், மோகன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர்.

2 பேர் பலி

போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவிக்கு பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிதுநேரத்தில் மணிகண்டன் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்த டிரைவர் பார்த்திபன், டெக்னீசியன் மணிகண்டன் ஆகியோர் வேலூரில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story