65 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்ய ஏற்பாடு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தடுப்புகள் அமைப்பு


65 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்ய ஏற்பாடு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தடுப்புகள் அமைப்பு
x
தினத்தந்தி 7 May 2020 4:41 AM GMT (Updated: 7 May 2020 4:41 AM GMT)

வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 65 டாஸ்மாக் கடைகளில் மது விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கடைகளின் முன்பு மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூர்,

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளின் வசதிக்காக வேலூர், அரக்கோணம் என்று 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 110 கடைகளும், அரக்கோணம் கோட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் 88 கடைகளும் உள்ளன.

கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி மூடப்பட்டன. வேலூர் கோட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காணப்பட்ட மதுபாட்டில்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர், காட்பாடியில் பகுதியில் உள்ள 3 திருமண மண்டபங்களில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. சுமார் 40 நாட்களுக்கு பின்னர் டாஸ்மாக் கடைகளை இன்று (வியாழக்கிழமை) முதல் திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

தடுப்புகள் அமைப்பு

அதன்பேரில் வேலூர் கோட்டத்தில் உள்ள 65 டாஸ்மாக் கடைகளில் மது விற்க செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 55 கடைகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 கடைகளும் திறக்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக வேலூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள 17 கடைகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் காணப்படும் 28 கடைகளும் திறக்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மது விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி வேலூர் கோட்டத்தில் திறக்கப்படும் 65 டாஸ்மாக் கடைகளின் முன்பு மரக்கட்டைகளால் தடுப்புகள் நேற்று அமைக்கப்பட்டன. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், வரிசையாக நின்று டோக்கன் பெறும் வகையில் தடுப்பின் உள்பகுதியில் சுண்ணாம்பை கொண்டும் வட்டம் இடப்பட்டது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும், மதியம் 1 மணி முதல் 3 மணி வரை 40 முதல் 50 வயது உட்பட்ட நபர்களுக்கும், மாலை 3 மணி முதல் 5 மணி வரை 40 வயதுக்கு உட்பட்டோருக்கும் டோக்கன் மற்றும் மது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் தள்ளுமுள்ளு ஏற்படுவதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மது வாங்க வருபவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் முக கவசம் அணிந்தால் தான் மது வழங்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story