பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் புதுப்பொலிவு பெற்ற டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் புதுப்பொலிவு பெற்ற டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன
x
தினத்தந்தி 7 May 2020 6:07 AM GMT (Updated: 7 May 2020 6:07 AM GMT)

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இன்று முதல் திறக்கப்படுவதால் டாஸ்மாக் கடைகள் புதுப்பொலிவு பெற்றன.

பெரம்பலூர், 

பெரம்பலூர்-அரியலூர்  மாவட்டங்களில் இன்று முதல் திறக்கப்படுவதால் டாஸ்மாக் கடைகள் புதுப்பொலிவு பெற்றன.

டாஸ்மாக் கடைகள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மது கிடைக்காமல் மது பிரியர்கள் திண்டாடி வந்தனர். மேலும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் உள்ள மது பாட்டில்களை அந்தந்த மாவட்ட குடோன்களிலும், திருமண மண்டபங்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 35 டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபான பாட்டில்கள் அனைத்தும் பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு கொண்டு வரப்பட்டு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 53 டாஸ்மாக் கடைகளில் இருந்த மது பாட்டில்கள் கீழப்பழுவூரில் உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இன்று திறப்பு

இந்நிலையில் தமிழக அரசு இன்று (வியாழக்கிழமை) முதல், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று மும்முரமாக நடைபெற்றன.

இதில் டாஸ்மாக் கடைகள் சுத்தப்படுத்தப்பட்டதாலும், கடைகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் நடந்ததாலும், அந்த கடைகள் புதுப்பொலிவு பெற்றன. மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட கடைகளில் வெல்டிங் செய்து பாதுகாப்பை பலப்படுத்துதல், கடைகளுக்கு மது வாங்க வரும் மது பிரியர்களை ஒழுங்குபடுத்த தடுப்பு கட்டைகளை அமைத்தல், மது பிரியர்கள் வெயிலில் நிற்காமல் இருக்க கடைக்கு முன்பு சாமியானா பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. சமூக இடைவெளியை கடைபிடிக்க வட்டங்கள், கட்டங்கள் வரையும் பணியும் நடைபெற்றது.

போலீஸ் பாதுகாப்பு

மேலும் பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் குடோனில் இருந்து 34 டாஸ்மாக் கடைகளுக்கும், கீழப்பழுவூரில் திருமண மண்டபத்தில் இருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மது பாட்டில்கள் லாரிகள் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து அந்தந்த கடைகளில் ஊழியர்கள் உதவியுடன் மதுபாட்டில்கள் இறக்கப்பட்டு, கடைகள் பூட்டப்பட்டன.

இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, முக கவசம், சமூக இடைவெளி போன்ற அரசின் நிபந்தனைகளுடன் போலீசார் பாதுகாப்புடன் மது பாட்டில்கள் மாலை 5 மணி வரை விற்பனை செய்யப்படவுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மது பிரியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஜெயங்கொண்டம் பகுதியில் வாரியங்காவல், கல்லாத்தூர், உடையார்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு, மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக கட்டைகள் உள்ளிட்டவற்றால் தடுப்புகள் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story