அரியாங்குப்பம் கட்டுப்பாட்டு பகுதி மக்களிடம் முதல்-அமைச்சர் குறைகேட்பு


அரியாங்குப்பம் கட்டுப்பாட்டு பகுதி மக்களிடம் முதல்-அமைச்சர் குறைகேட்பு
x
தினத்தந்தி 7 May 2020 11:27 PM GMT (Updated: 7 May 2020 11:27 PM GMT)

கொரோனா பாதிப்பால் கட்டுப்பாட்டில் உள்ள அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி மக்களிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி குறைகேட்டார்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் சொர்ணா நகரை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சொர்ணாநகர், அம்பேத்கர் நகர், கோட்டைமேடு, பி.சி.பி.நகர், காலாந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் கடந்த 35 நாட்களுக்கும் மேலாக சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதி மக்கள், கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அரியாங்குப்பம் புறவழிச்சாலை கோட்டைமேடு சிக்னல் அருகே பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., விரைவில் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுப்பதாகவும், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகளை அழைத்து வருவதாகவும், அவர்களிடம் உங்களின் குறைகளை தெரிவிக்குமாறும் கூறினார்.

குறைகேட்பு

அதன்படி நேற்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன், தாசில்தார் ராஜேஷ் கண்ணா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கோட்டைமேடு சிக்னல் பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்தவர்களிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி குறைகள் கேட்டார். கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, அங்கு இருந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் மருத்துவ அதிகாரிகளிடம் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் ஒலிப்பெருக்கி உதவியுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சொர்ணா நகர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் இன்றுவரை குணமடையவில்லை. அந்த நபருக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவை பொறுத்து தான் கட்டுப்பாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குணமாகவில்லை என்றால் கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படும். மத்திய அரசின் ஆணைப்படி தான் ஊரடங்கு உத்தரவு புதுச்சேரியில் அமலில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்டன கோஷம்

அப்போது அந்த பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள், புதுச்சேரிக்கு கொரோனா நிதி தராத மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அரியாங்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து, பழைய கடலூர் ரோடு வரை கடைகளை திறக்க போலீசார் அனுமதி வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இன்னும் சில நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். நல்ல முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

Next Story