மயிலாடுதுறை பகுதியில் மது பாட்டில்கள் வாங்க நீண்ட வரிசையில் நின்ற மதுப்பிரியர்கள்


மயிலாடுதுறை பகுதியில் மது பாட்டில்கள் வாங்க நீண்ட வரிசையில் நின்ற மதுப்பிரியர்கள்
x
தினத்தந்தி 8 May 2020 12:28 AM GMT (Updated: 8 May 2020 12:28 AM GMT)

மயிலாடுதுறை பகுதியில் மது பாட்டில்கள் வாங்க மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

குத்தாலம், 

மயிலாடுதுறை பகுதியில் மது பாட்டில்கள் வாங்க மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

மதுக்கடைகள் திறப்பு

மயிலாடுதுறை நகரில் உள்ள 4 மதுக்கடைகளில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஒரு கடையை தவிர மற்ற 3 கடைகளும், சித்தர்காட்டில் உள்ள ஒரு கடையும் திறக்கப்பட்டன.

இந்த கடைகளின் முன்பு தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் செய்யப்படும் ஏற்பாடுகள் போல மதுப்பிரியர்கள் வரிசையில் நிற்பதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டன.

நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள்

குறிப்பாக மயிலாடுதுறை பஸ் நிலையத்திற்குள் இருக்கும் மதுக்கடை முன்பு 600 மீட்டர் தூரம் வரை மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். மதுப்பிரியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக விலகலை கடைபிடித்தும் வரிசையில் நின்றனர்.

ஆனால் அரசு அறிவித்தபடி வயது வாரியாக நேரக்கட்டுப்பாடும், ஆதார் அட்டை கொண்டு வருவோருக்கு மட்டுமே மதுபாட்டில்கள் கொடுக்க வேண்டும், ஒருவருக்கு ஒரு மதுபாட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் பின்பற்றப்படாமல் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.

சீர்காழி

சீர்காழியில், ஈசானிய தெரு, கொள்ளிடம் முக்கூட்டு, கதிராமங்கலம், கொண்டல், திருமுல்லைவாசல், கடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். பல்வேறு இடங்களில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்பாக சீர்காழி ஈசானியத்தெருவில் உள்ள மதுக்கடை முன்பு மதுப்பிரியர்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் சமூக விலகலை கடைப்பிடித்து நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். பாதுகாப்பு பணியில் சீர்காழி போலீசார் மற்றும் மதுக்கடை பணியாளர்கள் ஈடுபட்டனர். மதுக்கடைகளில் மது வாங்க வந்த மதுப்பிரியர்களின் கூட்டத்தை பார்ப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் குத்தாலம், பெரம்பூர், பாலையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு நீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

Next Story