குமரியில் கொட்டி தீர்த்த கோடை மழை நாகர்கோவிலில் 58 மில்லி மீட்டர் பதிவு


குமரியில் கொட்டி தீர்த்த கோடை மழை நாகர்கோவிலில் 58 மில்லி மீட்டர் பதிவு
x
தினத்தந்தி 8 May 2020 1:58 AM GMT (Updated: 8 May 2020 1:58 AM GMT)

குமரி மாவட்டத்தில் கோடை மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் 58 மில்லி மீட்டர் மழை பதிவானது.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கோடை மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் 58 மில்லி மீட்டர் மழை பதிவானது.

குமரியில் மழை

தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அனேக இடங்களில் சாரல் மழையும், ஓரிரு இடங்களில் பரவலான மழையும் பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. நேற்று காலையில் குமரி மாவட்டத்தில் வெயில் அடித்தது. மதியம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் நேற்று மதியம் 2 மணி அளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. நாகர்கோவிலில் மட்டும் சுமார் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இதனால் நாகர்கோவில் நகரின் சாலைகள் அனைத்திலும் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக நாகர்கோவில் கேப் ரோடு, செம்மாங்குடி ரோடு, அவ்வை சண்முகம் சாலை, கோட்டார் ரோடு, பறக்கை ரோடு, கே.பி.ரோடு, இந்து கல்லூரி ரோடு, கோர்ட்டு ரோடு, வடசேரி ரோடு, பொதுப்பணித்துறை அலுவலக ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரோடு போன்ற அனைத்து சாலைகளிலும் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

சில இடங்களில் மழை வெள்ளத்தோடு கழிவுநீரும் கலந்து ஓடியது. நாகர்கோவில் நகரின் தாழ்வான பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தன. கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த திடீர் கோடை மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story