கோவை அருகே, வீட்டை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள்


கோவை அருகே, வீட்டை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள்
x
தினத்தந்தி 7 May 2020 10:45 PM GMT (Updated: 8 May 2020 2:28 AM GMT)

கோவை அருகே வீட்டை இடித்து காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

துடியலூர்,

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒன்றாக இருக்கும் ஆனைகட்டி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை பயிர் வகைகளைத் தின்று சேதப்படுத்தி வருகின்றன. மேலும் கோடை காலம் என்பதால் குடி நீரை தேடும் காட்டுயானைகள் ஊருக்குள் அடிக்கடி வருகிறது . கடந்த கடந்த வாரம் வீரபாண்டியில் காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார் .

இந்த நிலையில் ஆனைகட்டி மாங்கரை அருகில் ஆனைக்கட்டி ரோட்டில் செங்கல் சூளை குடியிருப்பு பகுதிக்குள் 3 காட்டு யானைகள் நுழைந்து அங்கிருந்த ஒரு வீட்டை இடித்து சேதப்படுத்தியது. மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் மிதித்து நாசப்படுத்தியது. அப்போது வீட்டில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் அலறியடித்தப்படி அங்கிருந்த பின்கதவு வழியாக தப்பி ஓடினர்.

வடமாநில தொழிலாளர்களின் அலறல் சத்தம் கேட்டு, அந்த பகுதியில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் பட்டாசு வெடித்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். சிறிது நேரம் அங்கேயே சுற்றி வந்த காட்டு யானை பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் இந்த பகுதியில் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் தற்போது வீட்டை காட்டு யானை இடித்து உள்ளதால் நாங்கள் அச்சம் அடைந்து உள்ளோம். எனவே காட்டு யானையை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story