திருச்சி மாநகரில் அனல் பறந்த வெயிலிலும் டாஸ்மாக் கடைகளில் திரண்ட மதுப்பிரியர்கள் ஆதார் கட்டாயம் என்றதால் மது வாங்க முடியாமல் பலர் ஏமாற்றம்


திருச்சி மாநகரில் அனல் பறந்த வெயிலிலும் டாஸ்மாக் கடைகளில் திரண்ட மதுப்பிரியர்கள் ஆதார் கட்டாயம் என்றதால் மது வாங்க முடியாமல் பலர் ஏமாற்றம்
x
தினத்தந்தி 8 May 2020 3:31 AM GMT (Updated: 8 May 2020 3:31 AM GMT)

திருச்சியில் டாஸ்மாக் கடைமுன்பு திரண்ட குடிமகன்கள், அனல் பறந்த வெயிலையும் பொருட் படுத்தாமல் ஆர்வமுடன் நின்று வாங்கி சென்றனர்.

திருச்சி, மே.8-

திருச்சியில் டாஸ்மாக் கடைமுன்பு திரண்ட குடிமகன்கள், அனல் பறந்த வெயிலையும் பொருட் படுத்தாமல் ஆர்வமுடன் நின்று வாங்கி சென்றனர். ஆதார் கட்டாயம் என்றதால் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

காலை முதல் தவம்

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அனைத்து மதுபான கடைகளும் அரசு மற்றும் தனியார் பார்களும் மூடப்பட்டன. இதனால், மதுப்பிரியர்களின் பாடு பெரும் திண்டாட்டமாகி விட்டது. இந்தநிலையில் தமிழக அரசு உத்தரவின்படி, நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 183 மதுக்கடைகளில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 20 கடைகள் தவிர, 163 கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. கடைகள் திறப்பதை அறிந்து, நேற்று காலை முதலே பலர் மதுக்கடை அருகிலேயே காத்திருக்க தொடங்கினர். கடை முன்பு சவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, சமூக விலகலுக்கான கோடுகள் 1 மீட்டர் இடைவெளியில் போடப்பட்டிருந்தது.

டோக்கனுக்கு ஆதார் எண் முக்கியம்

மதுக்கடையில் இருந்து சுமார் 200 மீட்டருக்கு அப்பால், தேர்தலின்போது வாக்காளர் அடையாள அட்டையை பார்த்து ‘பூத்’ சிலிப் கொடுப்பது போல, மதுபானங்கள் வாங்க வருவோரிடம், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆதார் அட்டை எண்ணை சரிபார்த்த பின்னரே டோக்கன் வழங்கினர். ஆதார் அட்டை எதுவும் இன்றி வந்த சிலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். கடைகள் முன்பு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

திருச்சி இ.பி.ரோடு, பாபு ரோடு, காந்தி மார்க்கெட், சத்திரம் சிந்தாமணி பகுதி, திருச்சி மத்திய பஸ் நிலையப்பகுதி, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகில் என பல்வேறு டாஸ்மாக் கடைகளின் முன்பு மதுப்பிரியர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கால்கடுக்க டோக்கன்களுடன் நின்று, பைகளை கொண்டு வந்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.

திருச்சி புத்தூர் 4 ரோடு சந்திப்பில் செயல்படும் மதுபான கடையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. நபர் ஒருவருக்கு 4 குவார்ட்டர்கள் அல்லது ஒரு புல் பாட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. வயது அடிப்படையில் மதுபானம் விற்பனை என கூறப்பட்டாலும், அது கடைபிடிக்கப்படவில்லை. ஒவ்வொரு மதுபான கடைக்கும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 5 மணி வரை கடைகள் செயல்பட்டன.

மதுக்கடைகளில், அதனுடன் கூடிய மதுக்கூடங்கள் (பார்) செயல்படவில்லை. இதனால், மதுபாட்டில்கள் வாங்கிய சிலர், கடையை கடந்து சென்று சிறிது தூரத்திலேயே மது குடித்ததை காணமுடிந்தது. சிலர் ஆங்காங்கே மதுபோதையால் தள்ளாடியபடியும், இன்னும் சிலர் மட்டையாகியும் கிடந்தனர்.

Next Story