டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு: கரூரில், தி.மு.க.- கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு: கரூரில், தி.மு.க.- கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 May 2020 3:58 AM GMT (Updated: 8 May 2020 3:58 AM GMT)

டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கரூரில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர், 

டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கரூரில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் கருப்பு பட்டை (பேட்ஜ்) அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று கரூர் மாவட்டத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கரூரில் பல்வேறு இடங்களில் வீடுகளின் முன்பு தி.மு.க.வினர் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி கருப்பு சட்டை அணிந்து அவரது வீட்டின் முன்பு, கரூர் எம்.பி. ஜோதிமணி, கிளை செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பாலசுப்பிரமணியன் உள்பட 5 பேருடன் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது, கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்து விட்ட அ.தி.மு.க. அரசை கண்டிக்கிறோம், டாஸ்மாக் கடையை திறக்காதே, ஏழை மக்களின் குடியை கெடுக்காதே உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

கரூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமையில், கருப்பு பட்டை அணிந்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதேபோல் க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி உள்பட அனைத்து ஒன்றியங்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Next Story