தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்த தொழிலாளி தவறி விழுந்து சாவு


தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்த தொழிலாளி தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 8 May 2020 10:30 PM GMT (Updated: 8 May 2020 7:04 PM GMT)

தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்த தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அண்ணா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 47). கூலி தொழிலாளி. இவருக்கு பொன்இசக்கி என்ற மனைவியும் கணேசன், விக்னேஷ் ஆகிய மகன்கள் மற்றும் செல்வக்கனி என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இவரது வீட்டின் அருகே மின்சார ஒயர் அறுந்து கிடந்து உள்ளது. இதனால் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜாகிர் என்பவரிடம் மின்வாரிய அலுவலக தொலைபேசி எண் கேட்டாராம்.

அப்போது குடிபோதையில் இருந்த சரவணனுக்கும், ஜாகிருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஜாகிர் உள்ளிட்ட சிலர் சரவணனை தாக்கியதாக கூறப்படுகிறது.

சாவு

தொடர்ந்து இரவில் சரவணன் டூவிபுரம் 2-வது தெருவில் உள்ள தனது நண்பரின் வணிக வளாகத்தில் தூங்க சென்றாராம். நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் கண்விழிக்கவில்லை. இதனால் அவரை தேடி சென்றவர்கள், சரவணன் மொட்டை மாடியில் இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் உடலில் லேசான காயங்கள் இருந்தன.

இதனால் போலீசார் சந்தேக மரணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனையில், சரவணன் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால், தவறி கீழே விழுந்த நிலையில் இறந்து இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story