கடலூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கலெக்டர் அன்புசெல்வன் தகவல்


கடலூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
x
தினத்தந்தி 8 May 2020 10:17 PM GMT (Updated: 8 May 2020 10:17 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்தார்.

ராமநத்தம்,

சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வந்தவர்களில் மங்களூர் பகுதியை சேர்ந்தவர்கள் தொழுதூரில் உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 270 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு தொழிலாளி நேற்று முன்தினம் அங்கிருந்து தப்பி சென்று, அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளார். இது அந்த பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில், நேற்று மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தொழுதூர் கல்லூரியில் நேரில் ஆய்வு செய்தார். அங்கு பணியில் இருந்த மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வியிடம் அனைவருக்கும் மருத்துவபரிசோதணை நடத்தப்பட்டுவிட்டதா என கேட்டறிந்தார். பிறகு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களிடம் உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் அனைத்து வசதிகளையும் அதிகாரிகள் சிறப்பான முறையில் செய்து கொடுத்துள்ளனர். ஆனால், எங்கள் குடும்பத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று தெரிவித்தனர். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

அப்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கி வரும், ராமநத்தத்தில் உள்ள தனியார் ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஓட்டல் உரிமையாளர் அய்யம்பெருமாளிடம் என்னென்ன உணவு கொடுக்கப்பட்டு வருகிறது, சுத்தமாகவும், தரமான முறையில் உணவு வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.

வேப்பூர்

வேப்பூர் தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 112-க்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான உணவு வழங்குதல் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் அன்புசெல்வன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது கலெக்டர் அன்புசெல்வன் கூறுகையில், சென்னை மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்த 800-க்கும் மேற்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 356 நபர்கள் சிதம்பரம், கடலூர், விருத்தாசலம் ஆகிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நோய் தொற்று இல்லாதவர்களுக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழுதூர், விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம், கடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி, 14 நாட்கள் தனிமை படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை

பாதுகாக்கப்பட்ட கிராமங்களிலிருந்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தற்போது நோய் தொற்று இல்லை என்பதை அறிந்து இருந்தாலும், தொடர்ந்து 14 நாட்கள் நாம் இதை கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகத்திற்கு அந்தந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள கிராம கண்காணிப்பு குழு மூலம் தினந்தோறும் மக்களுக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக முதல்- அமைச்சர் அறிவுறுத்தலின் படி எதிர்கால நலன் கருதி மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் நோக்கம் தாய்க்கும், சேய்க்கும் பரவும் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாமல் இருப்பதை உறுதிப் படுத்திக் கொள்ளவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

ஆய்வின் போது, விருத்தாசலம் சப்-கலெட்டர் பிவீன்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி கிருபாகரன், திட்டக்குடி தாசில்தார்கள் செந்தில்வேல், ரவிச்சந்திரன், மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், தொழுதூர் தலைவர் குணசேகரன், ஊராட்சி செயலாளர் செந்தில், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் கிராமநிர்வாக அலுவலர்கள் ராசு , அன்புராஜ் உடனிருந்தனர். 

Next Story