சாக்கோட்டை அருகே விவசாயி கொலையில் 10-ம் வகுப்பு மாணவன் கைது


சாக்கோட்டை அருகே விவசாயி கொலையில் 10-ம் வகுப்பு மாணவன் கைது
x
தினத்தந்தி 8 May 2020 11:44 PM GMT (Updated: 8 May 2020 11:44 PM GMT)

சாக்கோட்டை அருகே விவசாயி கொலையில் 10-ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே மேலத்தோப்பை கிராமத்தை சேர்ந்தவர் ராக்கப்பன் (வயது 60). விவசாயியான இவருக்கும் உறவினர் ஒருவருக்கும் வீட்டிற்கு செல்லும் பாதை தொடர்பான தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ராக்கப்பன் தனது இடத்தில் சாராயம் காய்ச்ச முயன்றதாக சாக்கோட்டை போலீசார் அவரை கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர். இதற்கு அந்த உறவினர்தான் காரணம் என்று ராக்கப்பன் அவருடன் தகராறு செய்தார். இதில் ஏற்பட்ட மோதலில் உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்ட ராக்கப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சாக்கோட்டை போலீசார், ராக்கப்பனின் உறவினரை கைது செய்தனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தகராறு நடந்தபோது உறவினரின் மகனான 10-ம் வகுப்பு மாணவனும் உடன் இருந்ததாகவும், அவன்தான் ராக்கப்பனை உருட்டுக்கட்டையால் தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து மாணவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தாக்கியது தெரியவந்ததால் மாணவனையும் கைது செய்தனர்.

Next Story