கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிதாக 41 ஆயிரம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை - மந்திரி ஈசுவரப்பா தகவல்


கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிதாக 41 ஆயிரம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை - மந்திரி ஈசுவரப்பா தகவல்
x
தினத்தந்தி 8 May 2020 11:51 PM GMT (Updated: 8 May 2020 11:51 PM GMT)

கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிதாக 41 ஆயிரம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளதாக மந்திரி ஈசுவரப்பா கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித்துறை மந்திரி ஈசுவரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் (நரேகா) ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேலைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதில் 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். அவர்கள் அனைவரும் வேலை பெற தகுதியானவர்கள். இதற்கு எந்த தடையும் இல்லை.

கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதுவரை புதிதாக 40 ஆயிரத்து 745 குடும்பங்களுக்கு வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வேலை தேவைப்படுவோர் தங்களின் பெயரை பதிவு செய்ய கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி காலஅவகாசம் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி கூலி வேலை செய்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் கூலியை வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்கள்

ஆனால் கர்நாடகத்தில் பல பகுதிகளில் 8 நாட்களுக்குள் கூலி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் கூலியை வழங்க 15 நாட்களுக்கு மேல் ஆகியுள்ளது. இந்த நரேகா திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 45 ஆயிரத்து 499 பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், மக்கள் பிரதிநிதிகள் இந்த வேலை அடையாள அட்டையை பெற முடியாது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வேலை என்று அதிகாரிகள் கூறினால், அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மந்திரி ஈசுவரப்பா கூறினார்.

Next Story