வெளியூர் செல்ல விரும்புவோர் பொது சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


வெளியூர் செல்ல விரும்புவோர் பொது சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 May 2020 11:58 PM GMT (Updated: 8 May 2020 11:58 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அவசர நிகழ்வுகளுக்காக வெளியூர் செல்ல விரும்புபவர்கள் பொது சேவை மையங்கள் மூலம் கட்டணம் இல்லாமல் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர், 

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள், இறப்பு, திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்காக மாவட்டத்திற்குள்ளும், பிறமாவட்டங்களுக்கும், பிறமாநிலங்களுக்கும் பயணம் மேற்கொள்ள வாகன அனுமதி வழங்கும் பொருட்டு தமிழக அரசு தனியாக ஒரு இணையதளத்தை ஏற்பாடு செய்துள்ளது. வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர் திரும்ப அனுமதி வழங்கும் பொருட்டு தமிழக அரசு ஒரு இணையதளத்தை வடிவமைத்துள்ளது.

எனவே அவசர நிகழ்வுகளுக்காக வெளியூர் செல்ல விரும்புவோரும், வெளிமாநிலம் செல்ல விரும்புபவர்களும், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர் திரும்ப விரும்பினாலும் இணையதளம் வசதி உள்ள தங்களது செல்போன் மூலம் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம். 

இந்த வசதி இல்லாதவர்கள் தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் அரசு பொது சேவை மையங்கள் மூலம் கட்டணம் இல்லாமல் விண்ணப்பம் செய்யலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெறுவதற்கு பொதுமக்கள் மாநில அவசர செயல்பாட்டு மைய கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1070 மற்றும் மாவட்ட அவரச செயல்பாட்டு மைய தொலைபேசி எண் 1077 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story