திருச்சி மாநகரில் மதுபோதையில் 15 இடங்களில் மோதல் சம்பவங்கள் 3 பேருக்கு கத்திக்குத்து


திருச்சி மாநகரில் மதுபோதையில் 15 இடங்களில் மோதல் சம்பவங்கள் 3 பேருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 9 May 2020 3:22 AM GMT (Updated: 9 May 2020 3:22 AM GMT)

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதன் எதிரொலியாக திருச்சி மாநகரில் மதுபோதையில் 15 இடங்களில் மோதல் சம்பவங்கள் அரங்கேறின. இதில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

திருச்சி, 

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதன் எதிரொலியாக திருச்சி மாநகரில் மதுபோதையில் 15 இடங்களில் மோதல் சம்பவங்கள் அரங்கேறின. இதில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

டாஸ்மாக் கடைகள் திறப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதன் காரணமாக மாநகரில் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்தது. அடிதடி, சங்கிலி பறிப்பு, கொள்ளை போன்ற சம்பவங்கள் எதுவும் அரங்கேறவில்லை.

இந்தநிலையில் சுமார் 1½ மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதையொட்டி திருச்சி மாவட்டம் மற்றும் மாநகரத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளின் முன்பு போலீஸ் பாதுகாப்புடன் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை மது விற்பனை நடைபெற்றது. இதன் எதிரொலியாக மாநகரத்துக்குட்பட்ட ஸ்ரீரங்கம், பாலக்கரை, கே.கே.நகர், காந்திமார்க்கெட், தில்லைநகர் என 15 இடங்களில் அடிதடி, மோதல் சம்பவங்கள் அரங்கேறின. இதில் 3 இடங்களில் கத்திக்குத்து சம்பவமும் நடைபெற்றது. கே.கே.நகரில் இரு கும்பல் மோதி கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அடிதடி-மோதல் சம்பவங்கள்

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் பெரும்பாலான போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இதனால் போலீசார் பற்றாக்குறையால் ஊர்க்காவல் படையினர், என்.சி.சி. மாணவர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் ராணுவத்தினர் என பலரும் போலீசாருடன் இணைந்து பணியாற்றி வந்தனர். கடந்த 1½ மாதமாக ஊரடங்கு காலகட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு போன்ற பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வந்தனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சினையோ, குற்ற சம்பவங்களோ இல்லாததால் போலீசார் ஓரளவுக்கு சமாளித்து வந்தனர்.

ஆனால் தற்போது மாநகரில் ஆங்காங்கே தகராறு, அடிதடி, வெட்டு, குத்து சம்பவங்கள் அரங்கேறி வருவதால் என்னசெய்வதென்று தெரியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

Next Story