வெளியூர்களுக்கு சென்று நீலகிரி திரும்பிய 1,190 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்


வெளியூர்களுக்கு சென்று நீலகிரி திரும்பிய 1,190 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்
x
தினத்தந்தி 8 May 2020 10:00 PM GMT (Updated: 9 May 2020 3:54 AM GMT)

வெளியூர்களுக்கு சென்று நீலகிரி திரும்பிய 1,190 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

ஊட்டி,

சென்னை கோயம்பேடு சென்று வந்த லாரி டிரைவர்கள், கிளனர்கள் 45 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை செய்ததில், 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. நஞ்சநாடு கீழ் கோழிக்கரை, கக்கன்ஜி காலனி, சேலாஸ் நேருநகர் ஆகிய 3 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அப்பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகள், சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

உங்களால் தான் தொற்று பரவுகிறது என்று யார் மீதும் பழி சொல்லக்கூடாது. இதை அனுமதிக்க முடியாது. வைரஸ் யாருக்கு வேண்டுமானாலும் பரவலாம். அவர்கள் நமக்காக இங்கிருந்து காய்கறிகளை கொண்டு சென்று, அங்கிருந்து காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்தார்கள். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு 9 பேர் குணமடைந்து திரும்பினர். அவர்கள் வசித்து வந்த ஊட்டி காந்தல், குன்னூர் ராஜாஜி நகர், கோத்தகிரி கடைவீதி, எஸ்.கைகாட்டி ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் 28 நாட்கள் கண்காணிப்பு இன்றுடன்(அதாவது நேற்று) முடிவடைகிறது.

அந்த பகுதிகள் சீல் அகற்றப்பட்டு நாளை(அதாவது இன்று) முதல் விடுவிக்கப்படுகிறது. அப்பகுதி மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பகுதிகளில் 2 அல்லது 3 நாட்களில் மதுக்கடைகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த டிரைவர்கள், கிளனர்கள் என 238 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் முடிவுகள் வர வேண்டி உள்ளது. கொரோனா பாதிப்பால் 2 நாட்கள் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படாமல் நிறுத்தப்பட்டது.

பரிசோதனை செய்யப்பட்ட நபர்களுக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்ததும் தொடர்ந்து அவர்கள் சரக்கு வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுகிறது. வெளியூர்களுக்கு சென்று இ-பாஸ் மூலம் நீலகிரி திரும்பிய 1,190 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தனி அறையில் இருந்து, மற்ற நபர்களோடு பழகக்கூடாது. இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டி தனி வார்டில் தற்போது யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story