மீன்சுருட்டி அருகே மரத்தின் மீது கார் மோதி முன்னாள் எம்.எல்.ஏ. மகன் பலி


மீன்சுருட்டி அருகே மரத்தின் மீது கார் மோதி முன்னாள் எம்.எல்.ஏ. மகன் பலி
x
தினத்தந்தி 9 May 2020 6:22 AM GMT (Updated: 9 May 2020 6:22 AM GMT)

மீன்சுருட்டி அருகே மரத்தின் மீது கார் மோதியதில் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் பரிதாபமாக இறந்தார்.

மீன்சுருட்டி, 

மீன்சுருட்டி அருகே மரத்தின் மீது கார் மோதியதில் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் பரிதாபமாக இறந்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. மகன்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே ராமதேவநல்லூர் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். அ.தி.மு.க.வில் இருந்த அவர் பின்னர் தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள். இதில் மூத்த மகன் ராஜ்கமல்(வயது 30). பி.டெக் படித்துள்ள இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கங்கவடங்க நல்லூர் கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு ராஜ்கமல் சென்று தண்ணீர் பாய்ச்சினார்.

பின்னர் நள்ளிரவில் அவர் காரில் தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ராமதேவநல்லூர் அருகே வந்தபோது, கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள புளியமரத்தின் மீது மோதியது.

சாவு

இதில் ராஜ்கமல் பலத்த காயம் அடைந்தார். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து, ராஜ்கமலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிரேத கூடத்திற்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story