கரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் ரூ.3½ கோடிக்கு மது விற்பனை


கரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் ரூ.3½ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 9 May 2020 6:58 AM GMT (Updated: 9 May 2020 6:58 AM GMT)

கரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் ரூ.3½ கோடிக்கு மது விற்பனை ஆனது.

கரூர், 

கரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் ரூ.3½ கோடிக்கு மது விற்பனை ஆனது.

டாஸ்மாக் கடைகள் திறப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில், பல நாட்களாக அடைக்கப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டன. கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட சின்னவரப்பாளையம் நன்னியூர் புதூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக்கடையை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சேர்த்து மொத்தம் 94 டாஸ்மாக் கடைகள் திறந்து செயல்பட்டன.

ஊரடங்கால் மதுபானங்களை வாங்க முடியாமல் திக்கு முக்காடிய மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால் கரூர், தாந்தோணிமலை, குளித்தலை, நொய்யல், வேலாயுதம்பாளையம், தரகம்பட்டி, அரவக்குறிச்சி, க.பரமத்தி உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரூ.3 கோடியே 65 லட்சத்துக்கு விற்பனை

இதுகுறித்து கரூர் மாவட்ட டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் ரூ.3 கோடியே 65 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது. எப்போதும் சாதாரண நாட்களில் மாவட்டம் முழுவதும் ரூ.2 கோடி வரைக்கும், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ரூ.2 கோடியே 50 லட்சம் வரைக்கும் மதுவிற்பனையாகும் என்றார்.

Next Story