தமிழகத்தில் மதுக்கடைகள் மூடல்: மீண்டும் ஆந்திர மாநில எல்லை பகுதிகளுக்கு படையெடுக்கும் மது பிரியர்கள்


தமிழகத்தில் மதுக்கடைகள் மூடல்: மீண்டும் ஆந்திர மாநில எல்லை பகுதிகளுக்கு படையெடுக்கும் மது பிரியர்கள்
x
தினத்தந்தி 9 May 2020 11:45 PM GMT (Updated: 9 May 2020 8:44 PM GMT)

தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மீண்டும் ஆந்திர மாநில எல்லைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகளுக்கு மதுபிரியர்கள் செல்கின்றனர். அவர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நிலங்கள் வழியாக நடந்து சென்று வாங்கி வருகின்றனர்.

குடியாத்தம், 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மதுபான கடைகள் மூடப்பட்டது. சுமார் 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மதுபானக்கடைகள் ஆந்திராவில் கடந்த 4-ந் தேதி திறக்கப்பட்டது. குடியாத்தத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் சைனகுண்டாவை அடுத்த ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் ஒரு மதுபான கடையும், பரதராமி அருகே ஆந்திர மாநில எல்லையில் குடியாத்தத்தில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு மதுபான கடையும் திறக்கப்பட்டது.

இந்த மதுபான கடைகள் திறக்கப்பட்டதை அறிந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மதுபிரியர்கள் குடியாத்தம் பலமனேர் சாலையில் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள சைனகுண்டா சோதனை சாவடி அருகே 2 கிலோ மீட்டருக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நிலங்கள் வழியாக சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மதுபானங்களை வாங்கிக்கொண்டு மீண்டும் நடந்து வந்து மோட்டார்சைக்கிளுடன் ஊருக்கு திரும்பினர்.

மோட்டார் சைக்கிளில் சிலர் வருவதை தெரிந்து கொண்ட வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை சார்பில் அப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இருந்தாலும் மது பிரியர்கள் மோட்டார் சைக்கிள்களை தலைமீது வைத்து அந்த பள்ளத்தை தாண்டி மதுக்கடைக்கு சென்று மது வாங்கிக்கொண்டு வந்தனர்.

அதேபோல் பரதராமி அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்தனர். தொடர்ந்து 3 நாட்கள் ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் உள்ள மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. 2 நாட்கள் இயங்கிய மதுக்கடைகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டது.

நேற்று மதுக்கடைகள் திறக்காததால் தமிழகத்தில் இருந்து குடியாத்தம், கே.வி.குப்பம், பள்ளிகொண்டா, மாதனூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் மீண்டும் சைனகுண்டா மதுபான கடைக்கு வயல்வெளிகள் மூலமாக 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மதுபானங்களை வாங்கி வந்தனர். அதேபோல் பரதராமி பகுதிக்கும் மோட்டார் சைக்கிளிலும் சென்றும், நடந்து சென்றும் மதுபானங்களை வாங்கினர்.

இதுகுறித்து ஆந்திர மாநில எல்லைபகுதி மதுபான கடைக்காரர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் மதுக்கடை திறந்த முதல் 3 நாட்களில் நடந்த விற்பனை 2 நாட்களாக இல்லை. காரணம் தமிழகத்தில் கடைகள் திறக்கப்பட்டது தான். ஆந்திர மாநில மதுபிரியர்கள் விட தமிழகத்தில் இருந்து மதுபிரியர்கள் அதிகளவு வந்தனர். தற்போது மீண்டும் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் எங்கள் கடைகளில் மீண்டும் மதுவிற்பனை அதிகரிக்கும் என தெரிவித்தனர்.

Next Story