படப்பை அருகே, தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி ரியல் எஸ்டேட் அதிபர் பலி


படப்பை அருகே, தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி ரியல் எஸ்டேட் அதிபர் பலி
x
தினத்தந்தி 9 May 2020 10:30 PM GMT (Updated: 9 May 2020 9:56 PM GMT)

படப்பை அருகே தடுப்புச்சுவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ரியல் எஸ்டேட் அதிபர் பலியானார்.

படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் ஆகாஷ் நகர் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் வடிவேல்(வயது 34). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை இவர் மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, இரவு தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

படப்பை அடுத்த எருமையூர் ராயப்பா நகர் 400 அடி பைபாஸ் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி அருகே வரும்போது எதிர்பாராத விதமாக சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து வடிவேல் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சாவு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த நிலையில் கிடந்த வடிவேலை மீட்டு சிகிச்சைக்காக தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான வடிவேலுக்கு சிவகாமி(30) என்ற மனைவியும், சீதாலட்சுமி(10) என்ற மகளும், பொன்னரசன்(8) என்ற மகனும் உள்ளனர்.


Next Story