தஞ்சை பெரியகோவில் முழுவதும் 10 ஆயிரம் லிட்டர் கிருமிநாசினி தெளிப்பு


தஞ்சை பெரியகோவில் முழுவதும் 10 ஆயிரம் லிட்டர் கிருமிநாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 9 May 2020 10:24 PM GMT (Updated: 9 May 2020 10:24 PM GMT)

தஞ்சை பெரியகோவில் முழுவதும் 10 ஆயிரம் லிட்டர் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் முழுவதும் 10 ஆயிரம் லிட்டர் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தஞ்சை பெரியகோவில்

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் வருகிறது. 23 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி பெரியகோவிலில் குடமுழுக்கு நடந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், நினைவு சின்னங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டது.

கிருமிநாசினி தெளிப்பு

அதன்படி தஞ்சை பெரியகோவிலும் கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி மூடப்பட்டது. நேற்றுடன் பெரியகோவில் மூடப்பட்டு 52 நாட்கள் ஆகிறது. கோவில் மூடப்பட்டாலும் தினமும் 4 வேளை பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது. மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை மகா நந்திக்கு நடைபெறும் பிரதோஷ வழிபாடும் பக்தர்கள் இன்றி நடந்து வருகிறது.

இந்த நிலையில் பெரியகோவில் முழுவதும் கிருமிநாசினி தெளிக்குமாறு இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டது. அதன்படி தஞ்சை பெரியகோவில் முழுவதும் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

10 ஆயிரம் லிட்டர்

மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜகுமார், இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் 10 ஆயிரம் லிட்டர் கிருமிநாசினி நவீன டிராக்டர் மற்றும் சரக்கு ஆட்டோ மூலம் எடுத்துச்செல்லப்பட்டு கோவில் முழுவதும் தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தஞ்சை மாநகராட்சி பகுதியில் தற்போது தினமும் 1 லட்சத்து 5 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் தினமும் 90 ஆயிரம் லிட்டர் வீதம் தெளிக்கப்பட்டது.

கடந்த 4-ந் தேதி முதல் மேலும் 15 ஆயிரம் லிட்டர் அதிகரிக்கப்பட்டு மாநகராட்சி முழுவதும் தெளிக்கப்பட்டு வருகிறது. 2 நாட்களுக்கு ஒருமுறை என 51 வார்டுகளிலும் இதுவரை 10-க்கும் மேற்பட்ட தடவை கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story