ஏ.சி. வசதி இல்லாத கடைகள் நிபந்தனைகளுடன் செயல்படலாம் - கலெக்டர் அறிவிப்பு


ஏ.சி. வசதி இல்லாத கடைகள் நிபந்தனைகளுடன் செயல்படலாம் - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 May 2020 7:00 AM GMT (Updated: 10 May 2020 7:00 AM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏ.சி. வசதி இல்லாத கடைகள் நிபந்தனைகளுடன் செயல்படலாம். இதுகுறித்து கலெக்டர் விஜயலட்சுமி கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருசில வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான கலந்தாய்வு கூட்டம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கலெக்டர் விஜயலட்சுமி கூறியிருப்பதாவது:-

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள், கடைகளை திறக்க அனுமதியில்லை. ஊராட்சி, பேரூராட்சிகளில் அனைத்து தொழிற்சாலைகளும் செயல்படலாம். மேலும் அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானம், சாலை பணிகளை மேற்கொள்ளலாம். பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏ.சி. மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் கலெக்டரிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம். கட்டுமான பொருட்களை எடுத்து செல்வதற்கு தடையில்லை. 

அச்சகங்களும் செயல்படலாம். மேலும் ஏ.சி. வசதி இல்லாத செல்போன் விற்பனை-பழுதுநீக்குதல், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மோட்டார் பழுதுநீக்குதல், கண் கண்ணாடி விற்பனை-பழுதுநீக்குதல், கடிகார விற்பனை-பழுதுநீக்குதல் ஆகிய கடைகள், சிறிய ஜவுளிக்கடைகள், செருப்பு கடைகள், தையல் கடை, அடகுகடை, ஒர்க்ஷாப், மிக்சி-குக்கர் பழுதுநீக்கும் கடை, கிராமங்களில் உள்ள அனைத்து தனிக்கடைகளையும் திறக்கலாம். 

இந்த கடைகள், சிறு நிறுவனங்களில் பணியாளர்கள் முக கவசம் அணிதல், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் செயல்பட வேண்டும். மீறினால் சீல் வைக்கப்படும். அதேநேரம் மாநகராட்சி, நகராட்சிகளில் வணிக வளாகங்கள், ஏ.சி. வசதி கொண்ட அனைத்து கடைகள், அழகு நிலையங்கள், சலூன்கடைகளுக்கு அனுமதி இல்லை.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Next Story