காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி
x
தினத்தந்தி 10 May 2020 10:15 PM GMT (Updated: 10 May 2020 9:52 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.

ஸ்ரீபெரும்புதூர், 

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே மொளச்சூர் பகுதியில் ஒருவரும், ஸ்ரீபெரும்புதூரில் 6 பேரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று புதிதாக ஸ்ரீபெரும்புதூரில் ஒருவருக்கும், மண்ணூர் பகுதியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. 

இதற்கிடையில் ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் ஒருவருக்கு திடீரென நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

122 பேர் பாதிப்பு

படப்பை அடுத்த ஆதனூர் ஊராட்சியை சேர்ந்த 53 வயது டிரைவர் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர், காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதிக் கப்பட்டு வருகிறது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 122 ஆனது. இவர்களில் 20 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்து விட்டார். 101 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story