புதிய பஸ் நிலையத்தில் செயல்படும் தற்காலிக மார்க்கெட்டில் நாராயணசாமி திடீர் ஆய்வு


புதிய பஸ் நிலையத்தில் செயல்படும் தற்காலிக மார்க்கெட்டில் நாராயணசாமி திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 10 May 2020 11:29 PM GMT (Updated: 10 May 2020 11:29 PM GMT)

புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தினார்.

புதுச்சேரி,

உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. புதுச்சேரியிலும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உழவர் சந்தை மற்றும் பெரிய மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் கொரோனா பாதிப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு அரசு சார்பில் புதிய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டு வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டன. தினமும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இந்த மார்க்கெட்டில் கூட்ட நெரிசலின்றி வாங்கிச் செல்கின்றனர். இந்தநிலையில் தற்காலிக மார்க்கெட்டுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை திடீரென வந்தார். அங்கு அரசின் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றனவா? என்பதை ஆய்வு மேற்கொண்டார்.

அறிவுறுத்தல்

ஆனால் அங்கு காய்கறி வாங்க வந்திருந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது கண்டு ஒருவருக்கு ஒருவர் போதுமான இடைவெளி விட்டு பொருட் களை வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தினார். அவர்களிடம் காய்கறி விலை நிலவரம் பற்றியும் கேட்டறிந்தார். இதன்பின் ரெட்டியார்பாளையம், மூலக்குளம், வழுதாவூர் ரோடு ஆகிய பகுதிகள் மற்றும் மார்க்கெட் கமிட்டியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி கடைகள் ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு செய்தார். அங்கும் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை அவர் அறிவுறுத்தினார்.

இலவச பருப்பு

இதன்பின் அஜந்தா சிக்னல் மற்றும் முத்தியால்பேட்டை மார்க்கெட் எதிரில் உள்ள தற்காலிக காய்கறி கடைகள், புதுவை எல்லைப் பகுதியான கோட்டக்குப்பம் சந்திப்பு மற்றும் நகரில் உள்ள தற்காலிக காய்கறி கடைகளை பார்வையிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் நாராயணசாமி கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து நெல்லித்தோப்பு தொகுதியில் தனது சொந்த செலவில் ஊரடங்கு நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 கிலோ அரிசி மற்றும் அரசு சார்பில் சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 கிலோ துவரம் பருப்பை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜான்குமார் எம்.எல்.ஏ., குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story