சேலத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


சேலத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 12 May 2020 4:56 AM GMT (Updated: 12 May 2020 4:56 AM GMT)

சேலத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

சேலம்,

சேலம் பொன்னம்மாபேட்டை அருகே உள்ள சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது குகை பகுதியை சேர்ந்த லீசா சொரூப் (வயது 20) என்பவரை காதலித்தார். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

லீசா சொரூப் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ராஜ்குமார்-லீசா சொரூப் ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் லீசா சொரூப் வீட்டில் தன்னுடைய அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். லீலா சொரூப் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

மேலும் லீசா சொரூப் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘அம்மா நான் உனக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்துவிட்டேன். என்னால் தான் குடும்ப மானம் போய் விட்டது. தற்போது உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். உடலை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்‘ என எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி லீசா சொரூபின் தந்தை ரங்கசாமி அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவரிடம் விசாரணை

புதுப்பெண் தற்கொலை குறித்து அவருடைய கணவர் ராஜ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, லீசா சொரூபை காதலித்து திருமணம் செய்துகொண்ட ராஜ்குமார் மீது அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அன்னையர் தினத்தை முன்னிட்டு லீசா சொரூப் தனது அம்மாவுக்கு செல்போனில் குறுஞ்செய்தி மூலம் வாழ்த்து அனுப்பினார். இதனால் கணவன்-மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவியுடன் கோபித்துக்கொண்டு ராஜ்குமார் வெளியே சென்றுவிட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்து வெளியே அமர்ந்து விட்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ராஜ்குமார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது லீசா சொரூப் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக, போலீசார் தெரிவித்தனர். 

Next Story