கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி 14 போலீசாருக்கு தொற்று உறுதி


கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி 14 போலீசாருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 12 May 2020 10:03 PM GMT (Updated: 12 May 2020 10:03 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் ஒருவர் பலியானார். மேலும் 14 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 395 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையை சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் மற்றும் சளி தொல்லையால் அவதி அடைந்த அவர், கடந்த 7-ந் தேதி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த பெண் நேற்று அதிகாலையில் இறந்தார். கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இவரே முதல் பலி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நேற்று தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

14 போலீசாருக்கு கொரோனா

இது மட்டுமின்றி 14 போலீஸ்காரர்கள் உள்பட 16 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூரில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த 4-ந்தேதி முதல் 134 பெண் காவலர்களுக்கு அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சமூக இடைவெளியுடன் பயிற்சி மேற்கொண்டாலும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்று பரிசோதிப்பதற்காக அவர்களிடம் இருந்து உமிழ்நீர் எடுக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் 10 பயிற்சி பெண் காவலர்கள், அவர்களுக்கு பயிற்சி அளித்த சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு, 2 போலீஸ்காரர்கள் என 14 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிகிச்சை

இதையடுத்து அந்த 14 பேரையும் சுகாதாரத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் கேட்டபோது, கடலூர் காவலர் பயிற்சி பள்ளி தனியாக செயல்பட்டு வருகிறது. அதில் பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் மற்றும் பயிற்சி அளித்த போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிகமாக மூடல்

மற்றவர்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா உறுதி செய்யப்பட்டதன் மூலம் காவலர் பயிற்சி பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அதன் அருகில் தான் இருக்கிறது. இருப்பினும் அங்கு வேலை பார்த்து வருவோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றார்.

இதையடுத்து தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அங்கு பிளச்சிங் பவுடர் போடுதல் போன்ற சுகாதார பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இருப்பினும் காவலர் பயிற்சி பள்ளிக்கு அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளதால், அங்கு பணியாற்றி வரும் போலீசார் அச்சத்தில் உள்ளனர். இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்ற 2 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 508 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.


Next Story