சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி தொழில் அதிபர் பலி குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்


சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி தொழில் அதிபர் பலி குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 13 May 2020 3:07 AM GMT (Updated: 13 May 2020 3:07 AM GMT)

சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி தொழில் அதிபர் பலியானார். மேலும் குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஓசூர்,

சென்னை அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் தேவகுமார் (வயது 34). தொழில் அதிபர். இவர் சென்னையில் இருந்து ஓசூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன், உறவினர்களான மனோஜ்குமார், அவரது மனைவி எலன்மேசி, சாமுவேல், அவரது மனைவி இன்பநாயகி மற்றும் ஒரு மாத கைக்குழந்தை ஆகியோர் சென்றனர். தேவகுமார் காரை ஓட்டி சென்றார்.

சூளகிரி அடுத்த சுண்டகிரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு, கார் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரி டிரைவர் திடீரென லாரியை நிறுத்தினார். இதனால் லாரியின் பின்புறம் கார் மோதியது. இதில், காரை ஓட்டி சென்ற தேவகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

5 பேர் படுகாயம்

மேலும் காரில் சென்ற ஒரு மாத கைக்குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் விரைந்து சென்று இறந்த தேவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த தேவகுமாரின் மனைவி கிருஸ்டினா ராயபிரியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story