10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 18-ந் தேதிக்கு பிறகு ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 18-ந் தேதிக்கு பிறகு ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 15 May 2020 11:30 PM GMT (Updated: 15 May 2020 8:08 PM GMT)

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 18-ந் தேதிக்கு பிறகு ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

நம்பியூர், 

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தேர்வை எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான பஸ் வசதிகள் செய்து கொடுக்கப்படும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்படும். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வரும் மாணவர்களுக்கு தனி வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு 18-ந் தேதிக்கு பிறகு ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்படும். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பிளஸ்-2 விடைத்தாள்களை திருத்தும் பணியை புறக்கணிப்பதாக கூறி இருப்பது, அது அவர்களது விருப்பம். அதற்கேற்ப அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்க்கவும். மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கலெக்டருடன் இணைந்து பணிகளை மேற்கொள்வார்கள் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

அதன்பிறகு, “ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக மாறி உள்ளதால், பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?”, என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மருத்துவ குழுவின் அறிவுரையின்படி அறிவிப்புகள் வெளியாகும்” என்றார்.

Next Story