திருமழிசை காய்கறி சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது


திருமழிசை காய்கறி சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 16 May 2020 10:30 PM GMT (Updated: 16 May 2020 9:40 PM GMT)

திருவள்ளூர் அருகே திருமழிசையில் தற்காலி கமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள திருமழிசை துணைக்கோள் நகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம், அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருமழிசையில் துணைக்கோள் நகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையில் வியாபாரிகள் அனைவரும் முழுமையாக சுகாதார இடைவெளியை கடைப்பிடித்து விற்பனை செய்ய வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும்.

வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதைகளில் பொருட்களை வைத்து விற்பனை செய்ய கூடாது.

மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத் துக்கொள்ள வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.

அதேபோல் திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அரசு முதன்மை செயலாளர் மற்றும் தொல்லியல் ஆணையர் உதயசந்திரன், கண்காணிப்பு அலுவலர் மற்றும் காவல்துறை தலைவர் (சிலை தடுப்பு பிரிவு) அன்பு ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், காவல்துறை தலைவர் (கடலோர பாதுகாப்பு) பவானீஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, அரசு மருத்துவமனை முதல்வர் ஸ்ரீவத்சவ் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story