சேலம் மாவட்டத்தில் 186 டாஸ்மாக் கடைகளில் மது வாங்க அலைமோதிய கூட்டம்


சேலம் மாவட்டத்தில் 186 டாஸ்மாக் கடைகளில் மது வாங்க அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 17 May 2020 4:01 AM GMT (Updated: 17 May 2020 4:01 AM GMT)

சேலம் மாவட்டத்தில் 186 டாஸ்மாக் கடைகளில் மது வாங்க நேற்று மது பிரியர்களின் கூட்டம் அலை மோதியது. பின்னர் அவர்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட நேரம் காத்திருந்து தங்களுக்கு தேவையான மது வகைகளை வாங்கிச்சென்றனர்.

சேலம்,

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் நேற்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 216 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் 30 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த பகுதிகளில் உள்ள கடைகளை தவிர சேலம் மாநகர் பகுதியில் 50 கடைகளும், புறநகர் பகுதியில் 136 கடைகளும் என மொத்தம் 186 மதுக்கடைகள் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. ஆனால் மது பிரியர்கள் ஒரு சில கடைகளில் காலை 7 மணிக்கே வரிசையில் நிற்க தொடங்கினர். பின்னர் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தினர்.

100 டோக்கன்கள்

இதையடுத்து அங்கு வந்த டாஸ்மாக் ஊழியர்கள் வரிசையில் நின்ற மது பிரியர்களுக்கு நீல நிற டோக்கன்களை வினியோகம் செய்தனர். கடைகள் முன்பு கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் ஒரு மணி நேரத்திற்கு 100 டோக்கன்கள் வீதம் வினியோகம் செய்யப்பட்டன. இதையடுத்து காலை 10 மணிக்கு அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை தொடங்கியது. டாஸ்மாக் கடைகள் முன்பு கம்புகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதன் வழியாகவே மது பிரியர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு வாரத்துக்கு பிறகு மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் காலை முதல் மாலை வரையிலும் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியதை காணமுடிந்தது. சேலம் மாநகரை பொறுத்தவரை டவுன் ரெயில் நிலையம் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையிலும், முள்ளுவாடி கேட் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பால் மார்க்கெட் செல்லும் வழியிலும் அடுத்தடுத்து உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவதற்காக மது பிரியர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியுடன் காத்திருந்து மது வகைகளை வாங்கி சென்றனர்.

முக கவசம்

அதேசமயம் முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே மது வழங்கப்பட்டது. ஒரு சில மது பிரியர்கள் வீட்டிலிருந்து வரும் போது பைகளை எடுத்து வந்திருந்தனர். பின்னர் அவர்கள் மதுக்கடைகள் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம் என்ற அச்சத்தில் ஒரு வாரத்திற்கு தேவையான மது வகைகளை மொத்தமாக வாங்கிச் சென்றதை காண முடிந்தது.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் வாங்க கூட்டம் அதிகமாக வந்ததால் ஒவ்வொரு கடையிலும் 4 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 ஏட்டுகள் நின்று கண்காணிக்க சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அனைத்து மதுபான கடைகளின் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கூடுதல் விலைக்கு விற்பனை

இதனிடையே, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வேடியப்பன் நேற்று சேலம், எடப்பாடி, ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மதுக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவர் மது பிரியர்கள் சமூக இடைவெளியுடன் இருக்கிறார்களா? டோக்கன் வினியோகம் முறையாக கொடுக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். இதனிடையே ஏத்தாப்பூரில் உள்ள மதுக்கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் அரசு நிர்ணயித்த விலைக்கே மதுபானங்களை விற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story