பெருமாநல்லூர் பகுதியில் இருந்து பஸ்களில் ஒடிசா மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்கள்


பெருமாநல்லூர் பகுதியில் இருந்து பஸ்களில் ஒடிசா மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 17 May 2020 4:10 AM GMT (Updated: 17 May 2020 4:10 AM GMT)

பெருமாநல்லூர் பகுதியில் இருந்து பஸ்களில் ஒடிசா மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்கள்.

பெருமாநல்லூர்,

திருப்பூர் மற்றும் பெருமாநல்லூர் பகுதியில் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பனியன் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளான அவர்கள் உணவு பொருட்கள் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர். இதனை தொடர்ந்து பெருமாநல்லூர் போலீசார் 600 பேருக்கு தொடர்ந்து உணவு பொருட்கள் வழங்கி வந்தனர். இந்நிலையில் வட மாநில தொழிலாளர்களின் வேண்டுகோளின்படி அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடும்செய்தனர். அதன்படி தமிழக அரசின் அனுமதி பெற்று பஸ்கள் மூலம் கடந்த சில நாட்களில் உத்தரபிரதேச மாநிலத்திற்கு 60 பேரும், பீகாருக்கு 30 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று பரமசிவம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த தொழிலாளர்களை, நியூ திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் இருந்து பீகார் மாநிலத்திற்கு 30 பேருடன் ஒரு பஸ்சும், ஒடிசா மாநிலத்திற்கு 4 மினி பஸ்களில் 60 பேரும் புறப்பட்டு சென்றனர். இவர்களை பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதே போல் பெரிச்சிப்பாளையம், கே.என்.பி.காலனி பகுதியில் தங்கியிருந்த ஒடிசா மாநில தொழிலாளர்கள் 30 பேர் வாகன அனுமதி பெற்று நேற்று ஒரு பஸ்சில் ஒடிசாவுக்கு புறப்பட்டு சென்றனர். சொந்த செலவில் வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி தொழிலாளர்கள் புறப்பட்டனர். இதுபோல் வெளிமாநில தொழிலாளர்கள் வாடகைக்கு வாகனங்களை அமர்த்தி வெளிமாநிலங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது. 

Next Story