டாஸ்மாக் கடைகள் திறப்பு: குடையை பிடித்தபடி மது வாங்கி சென்ற குடிமகன்கள்


டாஸ்மாக் கடைகள் திறப்பு: குடையை பிடித்தபடி மது வாங்கி சென்ற குடிமகன்கள்
x
தினத்தந்தி 17 May 2020 4:37 AM GMT (Updated: 17 May 2020 4:37 AM GMT)

டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் குடையை பிடித்தபடி நீண்ட வரிசையில் நின்று குடிமகன்கள் மது வாங்கி சென்றார்கள்.

ஈரோடு,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தமிழகத்தில் நேற்று சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நேற்று மது கடைகள் திறக்கப்பட்டன. அந்தியூர் தவிட்டுப்பாளையம், ஆப்பக்கூடலில் உள்ள மதுக்கடைகள் முன்பு நேற்று காலை 8 மணி முதலே ஏராளமான மதுபிரியர்கள் குவிந்தனர். முகக் கவசங்கள் அணிந்துகொண்டும் கையில் குடை பிடித்தபடியும் மது வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அந்த பகுதியில் 2 மதுக்கடைகள் இருந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரின் வழிகாட்டுதலின் பேரில் வரிசையில் நின்ற மது பிரியர்களுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் டோக்கன் கொடுத்தனர். 500 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுக் கப்பட்டு மது வழங்கப்பட்டது.

சத்தியமங்கலம்

மது பிரியர்களிடம் போலீசார் அவ்வப்போது தகுந்த இடைவெளி விட்டும், முகக் கவசங்கள் அணிந்து கையில் குடை பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வந்தனர். மதியம் 1 மணிக்கு மேல் கூட்டம் குறைந்தது. இதேபோல் சத்தியமங்கலத்தில் வாய்க்கால் மேடுவில் உள்ள மதுக்கடையில் மதுபிரியர்கள் குடைகளை பிடித்தபடி நீண்ட வரிசையில் நின்றனர். சென்னிமலையில் அறச்சலூர் ரோட்டில் மதுக்கடையிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கொடுமுடி வடக்கு புதுப்பாளையம், கம்மங்காட்டுக்களம், சாலைப்புதூர் கமிட்டி ரோடு, சோளக்காளிபாளையம் ரோடு ஆகிய இடங்களில் உள்ள மதுக்கடைகளிலும் மதுக்கடைகள் திறந்து விற்பனை செய்யப்பட்டன. ஆனால் மதுக்கடைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது. மதுக்கடைகள் முன்பு கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை ஒன்றியத்தில் பூதப்பாடி, மூனாஞ்சாவடி, பூனாச்சி, குருவரெட்டியூர், ஒலகடம், நால்ரோடு, வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி, கொமராயனூர் உள்ளிட்ட 14 மதுக்கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளில் மது குடிப்பதற்காக நேற்று காலை முதலே ஆதார் அட்டையுடன் மதுபிரியர்கள் குவிந்தனர்.

சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று டோக்கன் பெற்று மது வாங்கி சென்றனர். மாலை 5 மணிக்குள் டோக்கன்கள் தீர்ந்து அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. அதன்பின்னரும் ஒரு சிலர் மதுக்கடைகள் முன்பு நின்றனர். அவர்களை போலீசார் விரட்டிவிட்டனர்.


Next Story