பாளையங்கோட்டையில் அம்மா உணவகத்தை அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு


பாளையங்கோட்டையில் அம்மா உணவகத்தை அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு
x
தினத்தந்தி 17 May 2020 11:45 PM GMT (Updated: 17 May 2020 8:21 PM GMT)

பாளையங்கோட்டையில் அம்மா உணவகத்தை அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு செய்தார்.

நெல்லை, 

பாளையங்கோட்டை ஜவகர் மைதானத்தில் உள்ள அம்மா உணவகத்தை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா, முக கவசம் அணிந்து வருகிறார்களா என ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

அமைச்சர் ராஜலட்சுமி கூறுகையில், “கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அன்றாடம் வேலைக்கு செல்லும் ஏழை எளிய மக்கள், சாலையோர பொதுமக்கள் மற்றும் மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கி இருக்கும் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நெல்லை மாநகர பகுதியில் 11 அம்மா உணவகங்களிலும் காலை, மாலை வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர பகுதியில் ஒரு நாளைக்கு 8 ஆயிரம் பேர் பயன்பெறுகிறார்கள். உணவு வாங்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழக அரசு சார்பில் கபசுரகுடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட வேண்டும்“ என்றாார். சுமார் 500 பேருக்கு நேற்று உணவு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டன.

தொடர்ந்து அமைச்சர் ராஜலட்சுமி பாளையங்கோட்டை மார்க்கெட் மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு படக்காட்சியை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷில்பா, மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story