டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு: குமரியில் மது பிரியர்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்


டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு: குமரியில் மது பிரியர்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 17 May 2020 11:00 PM GMT (Updated: 17 May 2020 9:00 PM GMT)

டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. குமரியில் மது பிரியர்கள் போட்டி போட்டு மது பாட்டில்களை வாங்கி சென்றனர். பெரும்பாலான கடைகளில் கூட்டம் இல்லை.

நாகர்கோவில், 

கொரோனா வைரஸ் பரவலையொட்டி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. நிபந்தனைகள் எதையும் அரசு பின்பற்றவில்லை எனக்கூறி, ஆன்லைனில் மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து 7 மற்றும் 8-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மது விற்பனை செய்ததோடு மீண்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 43 நாட்களுக்குப்பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இந்தநிலையில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை உத்தரவு பிறப்பித்தனர். இதனால் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்க தடை இல்லை என்பதை அறிந்த மதுபான பிரியர்கள் உற்சாகமடைந்தனர்.

அதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. குமரி மாவட்டத்தில் மொத்தம் 113 மதுபானக்கடைகள் உள்ளன. இவற்றில் ஒரு கடையில் தீவிபத்து நடந்ததால் அந்த கடை மற்றும் முக்கிய சந்திப்புகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் என 13 கடைகள் தவிர 100 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

டாஸ்மாக் கடைகள் அனைத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சில மதுக்கடைகளில் போலீசார் மைக் மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிந்து, கை கழுவும் திரவம் மூலம் கைகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தியபடி இருந்தனர்.

மதுவாங்க வருபவர்கள் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டியதில்லை என்றும், மது வாங்குவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதேநேரத்தில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வண்ணத்தில் வினியோகம் செய்யப்படும் டோக்கன்களை பெற்று மதுவாங்க வேண்டும் என்றும், டோக்கன்களை போலீசார் வினியோகம் செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று சாம்பல் நிற டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.

கடை திறப்பதற்கு முன்பே சிலர் மது வாங்கும் ஆர்வத்தில் கடை முன்பு திரண்டு இருந்தனர். நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த மது பிரியர், சந்தோஷத்தில் தடியங்காயில் சூடம் ஏற்றி கடைக்கு திருஷ்டி சுற்றினார்.

டாஸ்மாக் கடைக்கு வந்த மது பிரியர்கள் போட்டி போட்டு மதுபாட்டில்களை ஏராளமாக வாங்கி சென்றனர். சிலர் கைகளில் நான்கைந்து பாட்டில்களை ஏந்திச் சென்றனர். சிலர் பைகள் நிறைய மதுபாட்டில்களை வைத்து கொண்டு சென்றனர். ஆனால் நேற்று அதிகாரிகள் எதிர்பார்த்த அளவு பெரும்பாலான கடைகளில் கூட்டமும் இல்லை, வியாபாரமும் இல்லை.

இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்டபோது, குமரி மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான கடைகளில் கூட்டம் இல்லை. பணம் இல்லாததும், பஸ் போக்குவரத்து இல்லாததுதான் கூட்டம் குறைந்ததற்கு காரணம். பெரும்பாலான கடைகளில் 500 டோக்கன் கூட வினியோகிக்கவில்லை. நாகர்கோவிலில் உள்ள சில கடைகள் மற்றும் மேற்கு மாவட்டப்பகுதிகளில் உள்ள கடைகள் என மொத்தம் 20 கடைகளில் மட்டும்தான் 500 டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டு, அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரஞ்சு நிற டோக்கனும், நாளை (திங்கட்கிழமை) நீல நிற டோக்கனும் வினியோகம் செய்யப்பட இருக்கிறது என்றனர்.

Next Story