நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர் கதி என்ன?


நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர் கதி என்ன?
x
தினத்தந்தி 18 May 2020 2:31 AM GMT (Updated: 18 May 2020 2:31 AM GMT)

நண்பர்களுடன் கடலில் குளித்தபோது கல்லூரி மாணவரை ராட்சத அலை இழுத்துச் சென்றது.

பாகூர்,

தவளக்குப்பம் அடுத்துள்ள தானாம்பாளையம் நல்லவாடு ரோடு, சப்தகிரி நகரை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் கலை என்கிற கலையரசன் (வயது 23). புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் கலைக் கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் இறுதியாண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்துவந்த கலையரசன், கொருக்கமேட்டை சேர்ந்த நண்பர் செல்வா உள்பட 7 பேருடன் பூரணாங்குப்பம் புதுக்குப்பம் கடற்கரைக்கு நேற்று சென்றார். பின்னர் பாரடைஸ் பீச் அருகில் உள்ள கடலில் அவர்கள் குளித்தனர்.

ராட்சத அலை இழுத்துச் சென்றது

உம்பன் புயல் காரணமாக நேற்று கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதை பொருட்படுத்தாமல் அவர்கள் கடலில் ஆனந்தமாக குளித்தனர். திடீரென்று எழுந்த ராட்சத அலை கலையரசன், செல்வா ஆகியோரை வாரி சுருட்டிக்கொண்டு கடலுக் குள் இழுத்துச்சென்றது. இதை பார்த்த மற்ற நண்பர்கள், அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதை பார்த்த அப்பகுதியில் இருந்த மீனவர்கள், உடனே கடலுக்குள் குதித்து, கலையரசன், செல்வா ஆகியோரை தேடினர். இதில் செல்வா மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் கலையரசன் அலையில் சிக்கி மாயமானார். அவரை படகு மூலம் மீனவர்கள் உதவியுடன் தவளக்குப்பம் போலீசார் கடலுக்குள் சென்று தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கதி என்ன?

இதை அறிந்த கலையரசனின் பெற்றோர் கடற்கரைக்கு வந்து, தனது மகனின் கதி என்ன என்று தெரியாமல் கதறி அழுதனர். இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அந்த பகுதியில் குளிப்பதை தடை செய்தும், மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story