சேலத்தில் 2-வது நாளாக டாஸ்மாக் கடைகள் முன்பு குவிந்த மது பிரியர்கள்


சேலத்தில் 2-வது நாளாக டாஸ்மாக் கடைகள் முன்பு குவிந்த மது பிரியர்கள்
x
தினத்தந்தி 18 May 2020 3:53 AM GMT (Updated: 18 May 2020 3:53 AM GMT)

சேலத்தில் 2-வது நாளாக டாஸ்மாக் கடைகள் முன்பு குவிந்த மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர்.

சேலம்,

தமிழகம் முழுவதும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதியுடன் டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. இதனால் மது பிரியர்கள் உற்சாகமடைந்து தங்களுக்கு தேவையான மது வகைகளை வாங்கி சென்றனர்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 216 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் 30 கடைகள் செயல்பட்டு வருவதால் அந்த கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதனால் மீதமுள்ள 186 மதுக்கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. இதனால் அனைத்து கடைகள் முன்பும் மது பிரியர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான மது வகைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

மது பிரியர்களுக்கு டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டு மது விற்பனை நடைபெற்றது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ. 8 லட்சத்திற்கும் மேல் மது விற்பனை நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று 2-வது நாளாக டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவதற்காக மது பிரியர்கள் குவிந்தனர். சேலம் மாநகரில் உள்ள 50 மதுக்கடைகளிலும் விற்பனை களைகட்டியது. இருந்தபோதிலும் காலையில் இருந்த கூட்டம் மாலையில் அவ்வளவாக காணப்படவில்லை.

நீண்ட வரிசை

சிவதாபுரம் பகுதியிலுள்ள ஒரு மதுக்கடையில் நேற்று 2-வது நாளாக மது பிரியர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வகைகளை வாங்கி சென்றனர். மது பிரியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அறிவுறுத்தினர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 186 டாஸ்மாக் கடைகளிலும் நேற்று 2-வது நாளாக மது வாங்க கூட்டம் அலைமோதியதை காணமுடிந்தது. 

Next Story