கல்லணைக்கால்வாய் கடைமடை பாசன பகுதியில் ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை விவசாயிகள் வலியுறுத்தல்


கல்லணைக்கால்வாய் கடைமடை பாசன பகுதியில் ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 May 2020 11:04 PM GMT (Updated: 19 May 2020 11:04 PM GMT)

கல்லணைக்கால்வாய் கடைமடை பாசன பகுதியில் ஏரி-குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பட்டுக்கோட்டை,

மேட்டூர் அணை அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி திறக்கப்படும் நிலையில் கல்லணைக்கால்வாய் கடைமடை பாசன பகுதியில் ஏரி-குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

காவிரி டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

அதன் பின்னர் போதிய மழை இல்லாததாலும், அணை நிரம்பாததாலும் காலந்தாழ்த்தியே திறக்கப்பட்டு வந்த மேட்டூர் அணை 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

கல்லணைக்கால்வாய் பாசன பகுதி

காவிரி டெல்டா மாவட்டங்களில் கல்லணைக்கால்வாய் மூலம் பாசனம் பெறும் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் மிகவும் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.

மேட்டூர் அணை குறிப்பட்ட காலத்தில் திறக்கப்பட்டாலும் கல்லணைக்கால்வாயில் கடைசி வரை பாசன நீர் சென்றடைய 2 மாதங்களுக்கு மேலாகும். இந்த கல்லணைக்கால்வாய் மூலம் தஞ்சை மாவட்டத்தில் பூதலூர், தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணமேல்குடி ஆகிய தாலுகாக்களில் 2 லட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

யானைப்பசி

இருப்பினும் தற்போது கல்லணைக்கால்வாய் தூர்வாரும் பணிக்காக ரூ.7 கோடியே 53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை ஆறில் ஒரு பங்கு கூட இல்லை. இது யானைப் பசிக்கு சோளப் பொரி போன்றதாகும் என விவசாயிகள் கூறுகிறார்கள். 1,205 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசன கிளை வாய்க் கால்கள் மட்டுமே தூர்வாரப்படுவதாக கூறப்படுகிறது.

இங்குள்ள ஏரி, குளங்கள் மூலம் தான் பெரும்பாலான நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது ஆயிரக்கணக்கான ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. ஏரி, குளங்கள் நிரம்பினால் தான் நிலத்தடி நீர் மட்டம் உயரும். வாய்க்கால்கள் தூர்வாரும் பணியோடு கல்லணைக்கால்வாய் பாசன பகுதியில் உள்ள அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வாரி நீரை நிரப்ப வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். கல்லணை திறந்தவுடன் கல்லணைக்கால்வாயின் கடைசிவரை பாசனநீர் சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story