மேலும் ஒருவர் பலி கர்நாடகத்தில் புதிதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு 556 பேர் குணம் அடைந்தனர்


மேலும் ஒருவர் பலி கர்நாடகத்தில் புதிதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு 556 பேர் குணம் அடைந்தனர்
x
தினத்தந்தி 20 May 2020 11:30 PM GMT (Updated: 20 May 2020 8:07 PM GMT)

கர்நாடகத்தில் புதிதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் ஒருவர் பலியானார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் புதிதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் ஒருவர் பலியானார். இதுவரை 556 பேர் குணமடைந்துள்ளனர்.

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் 1,354 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 67 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் நேற்று 43 வயது நபர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் தமிழகத்தில் உள்ள வேலூருக்கு சென்று வந்த பிறகு அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 42 அக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,420 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 556 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 864 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதிதாக பாதித்தவர்கள் பெங்களூரு நகரில் 4 பேர், மண்டியாவில் 8 பேர், கலபுரகியில் 7 பேர், பீதரில் 10 பேர், உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, யாதகிரியில் தலா ஒருவர், ஹாசனில் 21 பேர், உடுப்பியில் 6 பேர், துமகூருவில் 4 பேர், ராய்ச்சூரில் 4 பேர் ஆவர்.

கொரோனாவால் இதுவரை பாதித்தவர்களில் பெங்களூரு நகரில் 240 பேர், மண்டியாவில் 168 பேர், கலபுரகியில் 126 பேர், பெலகாவியில் 115 பேர், தாவணகெரேயில் 108 பேர், மைசூருவில் 89 பேர், பாகல்கோட்டையில் 75 பேர், பீதரில் 65 பேர், விஜயாப்புராவில் 56 பேர், உத்தர கன்னடாவில் 56 பேர், ஹாசனில் 53 பேர், தட்சிண கன்னடாவில் 43 பேர், தார்வாரில் 26 பேர், சிக்பள்ளாப்பூரில் 22 பேர், சிவமொக்காவில் 24 பேர், உடுப்பியில் 20 பேர், பல்லாரியில் 18 பேர், கதக்கில் 17 பேர், துமகூருவில் 13 பேர், யாதகிரியில் 13 பேர், ராய்ச்சூரில் 11 பேர், சித்ரதுர்காவில் 10 பேர், கோலாரில் 9 பேர், பெங்களூரு புறநகரில் 6 பேர், சிக்கமகளூருவில் 5 பேர், ஹாவேரியில் 3 பேர், கொப்பலில் 3 பேர், குடகில் 2 பேர், மற்றவர்கள் 23 பேர் ஆவர்.

கர்நாடகத்தில் இதுவரை 1 லட்சத்து 66 ஆயிரத்து 781 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 8,182 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று 50 சதவீதத்திற்கு மேல் குறைந்து பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்ற-இறக்கமாக இருந்து வருகிறது. ஆயினும் மருத்துவ நிபுணர்கள், ஜூலை மாத இறுதிக்குள் பெங்களூருவில் 10 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் என்று சொல்கிறார்கள். அதனால் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

Next Story