தஞ்சை ஒன்றியத்தில் தார்சாலை, குடிநீர் பணிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு


தஞ்சை ஒன்றியத்தில் தார்சாலை, குடிநீர் பணிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 20 May 2020 11:15 PM GMT (Updated: 20 May 2020 11:15 PM GMT)

தஞ்சை ஒன்றியத்தில் தார்சாலை, குடிநீர் பணிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை ஒன்றியத்தில் தார்சாலை, குடிநீர் பணிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்றியக்குழு கூட்டம்

தஞ்சை ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நேற்று ஒன்றிய அவைக்கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் வைஜெயந்திமாலா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அருளானந்தசாமி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பிரபாகரன், சூரிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக தஞ்சை ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை வட்டார வளர்ச்சி அதிகாரி பிரபாகரன் எடுத்துக்கூறினார்.

சாலை பணிகள்

கூட்டத்தில் தஞ்சை ஒன்றியத்தில் 29 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள 40 இடங்களில் தார் சாலைகள் மற்றும் குடிநீர் பைப்லைன் அமைத்தல், ஆழ்துணை கிணறு அமைத்தல் போன்ற பணிகளுக்கு ரூ.2 கோடியே 14 லட்சத்து 21 ஆயிரத்து 700 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 82 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் பிரேமாசாமிசரவணன் கொடுத்த மனுவில், “தஞ்சை விளார் பகுதியில் உள்ள காயிதேமில்லத்நகர், கலைஞர், பாப்பாநகர், பாரதிநகர் உள்பட 17 தெருவுக்கு செல்லும் சாலையை தார்சாலையாக மாற்றித்தர வேண்டும். பாரதிநகரில் புதிய குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும். கருப்பண்ணசாமி கோவில் எதிரே குடிநீர் வாரியத்தால் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பணியை விரைந்து முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொணடு வர வேண்டும். அரசு இலவச வீட்டுமனை பட்டாவில் குடியிருந்து வரும் பாரதிநகரை சேர்ந்தவர்களுக்கு சிட்டா பெற வழிவகை செய்து தர வேண்டும். புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும். செயல்படாமல் உள்ள நூலகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது நிதி

அருள்சகாயகுமார் (அ.தி.மு.க.):- டெங்குகாய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக களப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட பணியாளர்களுக்கு எந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய பொது நிதியில் எவ்வளவு இருப்பு உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்.

தி.மு.க. கவுன்சிலர் வண்டார்குழலி, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் ஆனந்தன், மணிகண்டன், குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனாட்சிசுந்தரம், சிவசண்முகம், அலுவலக மேலாளர் சிவக்குமார், வேளாண்மை உதவி இயக்குனர் அய்யம்பெருமாள் மற்றும் கல்வித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மின்வாரிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Next Story