பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.128 கோடியில் குடிமராமத்து, தூர்வாரும் பணிகள் கலெக்டர் தகவல்


பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.128 கோடியில் குடிமராமத்து, தூர்வாரும் பணிகள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 May 2020 11:28 PM GMT (Updated: 20 May 2020 11:28 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.128 கோடி செலவில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.128 கோடி செலவில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடப்பாண்டிற்கான குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி மேட்டூர்அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படுகிறது. எனவே, முன்னுரிமை அடிப்படையில் முதலில் தண்ணீர் வரும் கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். நடப்பாண்டில் தஞ்சை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.35.38 கோடி மதிப்பீட்டில் 109 பணிகளும், தூர்வாரும் பணிகளின் கீழ் ரூ.22.92 கோடி மதிப்பீட்டில் 944.97 கிலோமீட்டர் நீள தூரத்திற்கு 165 பணிகளும் நடைபெறவுள்ளது.

ரூ.128 கோடி

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 5 ஆயிரத்து 309 கி.மீ. நீளம் 1,325 வாய்க்கால் தூர்வாரும் பணிகள் ரூ. 64.86 கோடி மதிப்பீட்டிலும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 298.8 கி.மீ. நீளம் 231 வாய்க்கால் தூர்வாரும் பணிகள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் மொத்தம் ரூ.128 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளது. மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 608 குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரப்படவுள்ளது. நீர்நிலைகளை தூர்வாரும்போது வரத்து வாய்க்கால்கள் மற்றும் தண்ணீர் வெளியேறும் வாய்க்கால்களையும் முறையாக தூர்வார வேண்டும்.

விழிப்புணர்வு

உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக நீர்நிலைகள், ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டாமல் இருப்பதை தீவிரமாக கண்காணித்து, நீர்நிலைகளை தூய்மையாக பராமரிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின், தஞ்சை வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story